பரீட்சை எழுதாமல் தடுக்கப்பட்ட மாணவர்கள் விடுக்கப்பட அறிவிப்பு!

0
300

மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன். உதயரூபன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் பல சிரமங்களுக்கு மத்தியில் கா.பொ. த. சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் பரீட்சையினை சவாலாக எடுத்து தோற்றியுள்ளனர்.

கடந்த காலத்தில் கற்றல் செயற்பாடுகளில் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையிலும் போக்குவரத்து பிரச்சினைகள் உட்பட பல்வேறு நெருக்கடிகளை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள நிலையிலும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்படாமல் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு தடுக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.

இது தொடர்பில் வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில் மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியான விசேட செயற்றிட்டங்கள் கல்வி கொள்கையில் உள்ளன.

இவ்வாறான நிலையில் இதற்கான முழுப்பொறுப்பினையும் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.