ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் நபர் ஒருவர் 30cm நீளமுள்ள கூரான கத்தி மற்றும் இரும்புக்கம்பியை பயன்படுத்தி ஏழுபேரை தாக்கியுள்ளான். இதில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர். Paris Ourcq canal knife attack
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணிக்கு MK2 Cinema திரையரங்கில் இருந்து வெளியேறிய மூவரை முதலில் தாக்கியுள்ளான். அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிலர் தாக்குதலாளியை தடுத்து நிறுத்தும் முகமாக அவனை தள்ளி வீழ்த்தியதாகவும், பந்தால் அவன் மேல் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் கையில் கத்தி வைத்திருந்ததால் அவனருகே நெருங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தாக்குதலாளி rue Henri Nogueres வீதிக்குச் சென்று பிரித்தானியாவைச் சேர்ந்த இருவரை கத்தியால் தாக்கியுள்ளான். ஒருவருக்கு மார்பிலும், பிறிதொருவருக்கு தலையிலும் கத்தியால் குத்தியுள்ளதாக அறிய முடிகிறது. காயமடைந்த நபர்கள் வீதியில் விழுந்து கிடந்தனர். தாக்குதலாளி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலாளியை சுற்றி வளைக்க பொதுமக்கள் முயன்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த நபர் 31 வயதான ஆஃப்கானிஸ்தான் குடியுரிமை கொண்டவன் என தெரியவந்துள்ளது.