இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தனிப்பட்ட விஜயமாக டில்லி சென்றார். இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்றுவதற்காக அவர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே விக்கிரமசிங்க, மறைந்த மன்மோகன் சிங்கின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர் கோலியை சந்தித்து, அவரது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராஹூல் காந்தியுடனும் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.