தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி ரத்து!

0
171

விமான நிலையத்தின் விசேட பார்வையாளர் முனையத்தினூடாக அதிகளவு தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர முயன்றதில் சிக்கி அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பெற்று சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் கருத்தை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான பணிப்புரைகளை தாம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.