யாழில் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு(Photos)

0
294

சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு முதல்முறையாக வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் காட்டப்பட்டது.

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினை கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகு இன்று வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் வெறுமனே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு இயங்க வைக்கின்ற மோட்டார் இயந்திரம் மீன்பிடித் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ள விடயமாக எதிர்காலத்தில் அமையும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் மின்சார படகு

அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள், நிறுவன அதிகாரிகள், கடல் தொழிலாளிகள் முன்னிலையில் இந்த சூரிய சக்தியில் இயங்கும் மின்சார படகு பரிசீலனை செய்து காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கடற்தொழிலாளிகளின் தேவைகள் இந்த இயந்திரங்களினால் பூர்த்தி செய்யப்படுமாயின், பாரிய எரிபொருள் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீள வைக்கும் என்பது இங்கு வருகை தந்திருந்த பலரது கருத்தாகவும் அமைந்திருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடற்தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.