கருத்தரிப்பு தொடர்பில் தம்மை நாடிய பல பெண்களை சொந்த விந்தணுவைப் பயன்படுத்தி கருத்தரிக்க செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவர் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கையில், அவர் பயணித்த சோதனை முயற்சி விமானம் நடுவானில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருத்தரிப்பு மையம் ஒன்றை நடத்தி வந்தவர் மருத்துவர் மோரிஸ் வோர்ட்மேன்(72). ஞாயிற்றுக்கிழமை ஓர்லியன்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு புல்வெளியில் விழுந்து நொறுங்கிய சோதனை முயற்சி விமானத்தில் பயணித்துள்ளார்.
இந்த விமானத்தின் விமானியும் தொடர்புடைய சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். விமான விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
மேற்கு நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் வோர்ட்மேனும் ஒருவர். கருக்கலைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் இவர் அடிக்கடி இலக்காகியும் வந்துள்ளார்.
சொந்த விந்தணுவை ரகசியமாக
இந்த நிலையில், 1980 களில் கர்ப்பமான இவரது நோயாளி ஒருவரின் மகள் 2021ல் இவர் மீது வழக்குத் தொடர்ந்தார். குறித்த வழக்கில், விந்தணு தானம் செய்தவர் உள்ளூர் மருத்துவ மாணவர் என்று தமது நோயாளியிடம் கூறிய மருத்துவர் வோர்ட்மேன் தனது சொந்த விந்தணுவை ரகசியமாகப் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
டி.என்.ஏ சோதனையில் தான் வோர்ட்மேன் தமது விந்தணுவை பயன்படுத்தியுள்ளதை அந்த பெண்மணி அறிந்துகொண்டுள்ளார். மட்டுமின்றி, இதுபோன்று 9 பெண்களுக்கு தமது விந்தணுவை மருத்துவர் வோர்ட்மேன் ரகசியமாக பயன்படுத்தியுள்ளார்.
மேலும் மருத்துவர் வோர்ட்மேனின் முதல் தாரத்திற்கு பிறந்த மகளுக்கு முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு தொடர்பில் இறுதி வரையில் மருத்துவர் வோர்ட்மேன் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.