பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது இதயத்தை 16 வருடங்களுக்கு பின் அருங்காட்சியகத்தில் பார்த்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பிரித்தானியா – ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியை சேர்ந்த ஜெனிஃபர் சுட்டன் என்ற பெண் தனது 22 வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் மலைகளில் நடப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்வதில் தனக்கு சிரமம் இருப்பதை உணர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
பின்னர் அவருக்கு “ரெஸ்டிரிக்டிவ் கார்டியோமயோபதி” என்ற இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் உடல் முழுவதும் இரத்தத்தை வெளியேற்றும் இதயத்தின் திறனை கட்டுப்படுத்தும் ஒரு நோயாகும்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் தன் இரத்த மாதிரியை கொண்ட ஒருவரின் இதயம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து உடல் நலம் தேறிய சுட்டன், “ரோயல் கொலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்” நிறுவனத்தில் தன் இதயத்தை காட்சிக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளார்.
அந்த இதயம் தற்போது ஹோல்போர்னிலுள்ள அருங்காட்சியகத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 38 வயதாகும் சுட்டன் 16 ஆண்டுகள் முன் எடுக்கப்பட்ட தன் இதயத்தை அருங்காட்சியகத்தில் மீண்டும் கண்ட பின் அவருக்கே அது ஒரு வித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர் பேசுகையில்,
‘உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். நான் தற்போது நம்ப முடியாத அளவிற்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன். இந்த இதயத்தை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.