நேற்று முல்லைத்தீவில் இருந்து தொடங்கிய முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி நேற்றிரவு வவுனியாவைச் சென்றடைந்த நிலையில் இன்று மன்னார் நோக்கிப் பயணிக்கவுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தால் ஈவிரக்கமின்றி கடந்த 2009 ஆண்டு முள்லிவாய்க்காலில் தமிழ் மக்களை படுகொலை செய்திருந்தது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி
தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.
நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டது.
வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கடத்தப்படுவதன் ஊடாக எங்களுடைய நீதி கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டங்களைத் தொடர வேண்டும் என்கின்ற அடிப்படையிலே முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரை வந்தடைந்த ஊர்தி, அங்கிருந்து முள்ளியவளை, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம் ஆகிய பகுதிகளில் மக்கள் அஞ்சலிகளோடு இரவு வவுனியாவைச் சென்றடைந்துள்ளது.
இந்த ஊர்தியானது மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையவுள்ளது.