20,000 ரூபாவிற்கு விற்கப்பட்டாரா உயிரிழந்த 16 வயது களுத்துறை மாணவி! தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்

0
301

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த 16 வயது மாணவி பிரதான சந்தேகநபருக்கு பணத்திற்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவியுடன் விடுதிக்கு சென்ற பெண்ணின் காதலன் உயிரிழந்த மாணவியை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய யோசனை கூறியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி பிரதான சந்தேகநபர் பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் வழங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் (12.05.2023) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் இருதய நோயாளி எனவும், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் மேலும் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள் | Death Of The Kalutara Student

இதற்கிடையில் மாணவியின் கால் மற்றும் மார்பகங்களில் பற்களின் அடையாளங்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சந்தேகநபரை சட்டவைத்தியரிடம் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், சந்தேகநபர் மே 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினர்களிடமும் அவருடன் சென்ற 19 வயது பெண்ணிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.