யாழ்.அச்சுவேலி – சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலிருந்து சிறுவர்களை தப்பிக்க வைப்பதற்கு காவலாளி பணம் வாங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வெளி மாவட்ட சிறுவர்களே இவ்வாறு தப்பிச்சென்ற நிலையில் அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பணி இடைநிறுத்திய பாடசாலை நிர்வாகம்
மீட்கப்பட்ட சிறுவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அச்சுவேலிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டனர்.
அச்சுவேலிப் பொலிஸாரால் சிறுவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், நன்னடத்தைப் பாடசாலையின் காவலாளிக்கு தமது பெற்றோர் பணத்தை வைப்பிலிட்டதாகவும் அவரே தப்பிக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் காவலாளி வெளியிலிருந்து சட்டவிரோதமாக பொருள்களைக் கொண்டு வந்து தருவார் என்றும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளியை பாடசாலை நிர்வாகம் பணி இடைநிறுத்தியுள்ளது.
எனினும் பொலிஸார் இதுவரை அவரைக் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.