சரியான தருணத்தில் மக்களுடன் இணைந்து உரிய தீர்வுகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்த சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய முன்னாள் அதிபர் மேலும் தெரிவித்ததாவது,
தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க முக்கியத்துவம்
தொழிலாளர் அபிலாசைகளுக்கு முதலிடமளித்துள்ள நாம் சகல காலங்களிலும் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். எமது செயற்பாடுகள் தொடர் பில் சில சக்திகள் விமர்சனங்களை மேற்கொள்கின்றன. இது அவர்களது அரசியல் நோக்கமாக உள்ளது.
எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கென எந்த விடயமும் கிடையாது. அவர்கள் பேசுவதை நாம் தற்போது மௌனமாக கேட்டு வருகிறோம். மக்களே எதையும் தீர்மானிப்பர். 2004 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ரிமோட் எம்மிடமே உள்ளது என கூறியவர்கள் முடிவில் எதனை சாதித்தனர். இதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜனநாயகத்திற்கு மாறாக அதிகாரத்தை கைப்பற்ற
தொழிலாளர்களின் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். நான் தொழில் அமைச்சராக பதவி வகித்த போது தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தினேன். நாட்டின் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினார்கள். நாம் தொழிற்சங்க தலைவர்களுடன் பேசி பல தீர்மானங்களை மேற்கொண்டோம்.
தொழிலாளர்கள் தமது இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தினோம். ஜனநாயகத்திற்கு மாறாக அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது முறையற்றது. அது ஒரு போதும் முறையானதல்ல.
மாணவர்களை பணயக் கைதிகளாக
விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அதனால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அதில் அனைத்து ஆசிரியர்களும் சம்பந்தப்படவில்லை. எவ்வாறெனினும் மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.