சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஆலோசகர்கள் கொடுத்த யோசனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும் விவாத பொருளாகவும் மாறி வருகின்றது.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்லூரிகள் தற்போது இந்த யோசனையை பின்பற்ற துவங்கியுள்ளன.
சீனாவில் செயல்பட்டு வரும் 9 கல்லூரிகளில் இந்த தேசிய பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் தடாலடியான திட்டத்தை துவங்கிவிட்டன.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சம் ஒரு வாரம் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு மாணவர்கள் தங்களின் இணையரை கண்டுபிடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் சீனாவின் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை சமன் செய்ய முடியும்.
மார்ச் 23 ஆம் தேதி ஃபேன் மெய் கல்வி குழுமம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுப்பு அளித்துள்ளது.
இந்த 7 நாட்கள் விடுப்பு காலம் மாணவர்களை, “இயற்கையை நேசிக்கவும் காதல் வாழ்க்கையை கற்றுக் கொண்டு இலையுதிர் காலத்தில் மகிழ்ச்சியுடன் காதலை கொண்டாடவும்” ஊக்குவிக்கும்.
“மாணவர்கள் பசுமையான நீர்நிலைகள் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இலையுதிர்கால அமைதியை உணர்வார்கள் என நம்புகிறேன்.
இது மாணவர்களின் மனவோட்டத்தை விரிவுப்படுத்துவதோடு அவர்களின் உணர்வுகளை ஆழமாக்கி, அவர்கள் வகுப்பறையில் அதிக சிறப்பாக பாடங்களை உள்வாங்க உதவியாக இருக்கும்” என்று மியான்யங் ஃபிளையிங் கல்லூரி தலைவர் லியாங் குயோஹூய் தெரிவித்து இருக்கிறார்.
ஒருவார கால விடுப்பின் போது மாணவர்கள் டயரி எழுதுவது தனிநபர் வளர்ச்சி பற்றி குறித்துக் கொள்வது பயண வீடியோக்களை எடுப்பது போன்றவற்றை வீட்டுப் பாடமாக செய்ய வேண்டும்.