யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; பின்னனியில் பதவி நீக்கப்பட்ட ஊழியர்!

0
266

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் இல்ல விடுதியின் ஒருசில பகுதிகள் என்பன அங்குள்ள சில சிறுவர்களினால் அடித்து உடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சிறுவர் இல்லத்தின் விடுதி காப்பாளராக நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அங்கு வந்த சில மாதங்களிலேயே விடுதி முகாமையாளராக பதிவு உயர்வு பெற்றுள்ளார்.

பதிவு உயர்வு பெற்ற பின்னர் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை உடல் ரீதியாக கடுமையான தண்டனைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது. திறப்பினால் ஒரு சிறுவனுக்கு தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியமை, சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; பின்னனியில் பதவிநீக்கப்பட்ட ஊழியர்! | Children S Home Office Beaten Up In Jaffna

அவரது கொடுமைகள் தாங்காது விடுதியை விட்டு தப்பியோடிய சிறுவனை தாயார் மீள இல்லத்தில் ஒப்படைக்க வந்த போது தாயாருடன் அநாகரிக வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிர்வாகத்தினருக்கு கிடைத்துள்ளது.

மாணவர்களை தூண்டி வன்முறை

இதனை அடுத்து நிர்வாகத்தினர் முகாமையாளரான குறித்த இளைஞனை பதவி நீக்கம் செய்துள்ளனர். வேலையை விட்டு நிர்வாகம் நீக்கிய போதிலும் இல்லத்தில் இருந்து வெளியேற அவர் மறுத்துள்ளார்.

இதன் காரணமாக பொலிஸார் ஊடாக நிர்வாகத்தினர் நீதிமன்றை நாடியுள்ளனர். அதனை அடுத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று கட்டளையிட்டதை அடுத்து இல்லத்தில் இருந்து தான் வெளியேறும் போது அங்கிருந்த சில மாணவர்களை தூண்டி வன்முறைகளை தோற்றுவித்துள்ளார்.

யாழில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்; பின்னனியில் பதவிநீக்கப்பட்ட ஊழியர்! | Children S Home Office Beaten Up In Jaffna

அவரது தூண்டுதலால் அலுவலகத்தையும் இல்ல விடுதிகளின் சில பகுதிகளையும் அடித்து உடைக்க வைத்ததாக நிர்வாகத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை குறித்த நபர் சிறுவர்களை உடல் ரீதியாக மோசமாக துன்புறுத்துகின்றார் என பல தடவைகள் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் முறையிட்ட போதிலும் குறித்த அதிகாரி அவருடன் நட்பு பாராட்டி அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்ற நடவடிக்கை

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை வீணடிக்க விரும்பாத நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களை மாத்திரம் வேறு இல்லங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கோரியுள்ளதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மாற்ற பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாது. அது தொடர்பில் தாம் நீதிமன்றுக்கு அறிவிப்பதாகவும் நீதிமன்றின் ஊடாக சிறுவர்களை வேறு இல்லங்களுக்கு மற்ற நடவடிக்கை எடுக்கிறோம் எனவும் பொலிஸார் நிர்வாகத்தினரிடம் உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.