யாழ்.மாநகரசபை ஆளுகையின் கீழ் இருந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மத்திய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
அவரின் இந்த செயலை கண்டித்து யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தலைமையிலான குழுவினர் மகஜரை கையளித்தனர்.
ஆளுநர் ஜீவன் தியாகராஜா எழுத்து மூல நிபந்தனை
யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல், அதன் புனித தன்மையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்,
இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்.மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.