தமிழர் பகுதியின் வழிபாட்டுத் தலத்தை இடிக்க அரசு அனுமதி!

0
240

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக மத வழிபாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல் அகழ்விற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள் இந்த மலை பல ஆண்டுகளாக மத வழிபாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி வழிபாட்டிடத்தை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி! | Government Permits Demolition Of Hindus Rock

 பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடு

அதுமட்டுமன்றி பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான மக்களின் எதிர்ப்பை கருத்திற்கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் மார்ச் 8 ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வந்த கல் தூண் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் அதனையடுத்து அண்மையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகாரசபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்துவதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.