நாட்டுக்கு வந்தால் பண மழை! சுற்றுலாவாசிகளை குக்ஷிப்படுத்திய தாய்வான்!

0
353

தாய்வான் நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்பவர்களிற்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் சென் சியென்-ஜென் அறிவித்துள்ளமை சுற்றுலா பயணிகளை குக்ஷிப்படுத்தியுள்ளது.

தாய்வான் அரசாங்கம் 2023 இல் 60 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதேசமயம் 2024 இல் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதோடு 2025க்குள் 1 கோடி சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் பணத்தொகை

அதன்படி, தாய்வான் நாட்டிற்கு செல்லும் 500,000 தனிப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு 165 அமெரிக்க டொலர்களும் (இலங்கை மதிப்பில் ரூ 59,000) 90,000 சுற்றுலா குழுக்களுக்கு 658 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ 230,000) வரையிலான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளது.

குறித்த பணத்தொகை டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்றும் சுற்றுலாப் பயணிகள் தாய்வானில் தங்குமிடம் உட்பட தங்கள் செலவுகளை ஈடு செய்ய இதைப் பயன்படுத்த முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் வாங் குவோ-ட்சை தெரிவித்துள்ளார்.

ஜப்பான், தென் கொரியா, தென்கிழக்கு ஆசியா, ஹொங்கொங், மக்காவோ மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாய்வானுக்கு 2022 ஆம் ஆண்டில் 900,000 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளார்கள். அவர்களில் அதிகமானவர்கள் வியட்நாம், இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்து சென்றுள்ளதாக தாய்வான் சுற்றுலாப் பணியகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தத் திட்டம் எப்போது ஆரம்பிக்கும் அல்லது எப்படிப் பணத்திற்கு விண்ணப்பிப்பது என்பதை தாய்வான் அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

உலகின் மிக நீண்ட கொவிட்-19 எல்லை கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஒன்றான தாய்வான் கொரோனா கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 2022 இல் நீக்கி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி  உள்ளமை சுற்றுவாசிகளை  மகிழ்ச்சி கொள்ளவைத்துள்ளது.