பல ஏக்கர் புற்தரை தீயில் நாசம்; தெய்வாதீனமாக தப்பிய எரிப்பொருள் நிலையம்

0
264

தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ள நிலையில் எரிப்பொருள் நிரப்பு நிலையம் தெய்வாதீனமாக தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

 எரிப்பொருள் நிரப்பு நிலையம் வரை பரவிய தீ 

இதன்போது இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிப்பொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிப்பொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டது.

அத்துடன் இந்நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக இந்த எரிப்பொருள் நிரப்பு நிலையம் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது.

எரிப்பொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் காணப்பட்ட நீரை பயன்படுத்தி எரிப்பொருள் நிலையம் வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர்.

எனினும் இந்த தீ தொடர்ந்து மறுப்புறம் பண்ணையின் புற்தரை வழியாக தொடர்ந்து பரவிய நிலையில் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வழமைக்கு திரும்பின.