கச்சதீவு ஆலய உற்சவத்தில் அரசியல் சார்பில் மீனவ விடயம் பேச ஆயர்களுக்கு அனுமதி இல்லை; கூட்டத்தில் கோரிக்கை!

0
421

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவத்தில் அரசியல் சார்பிலான மீனவ விடயப் பேச்சுவார்தையை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் அனுமதிக்க கூடாது என வடக்கு மீனவ அமைப்புக்களின் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களிற்கு அனுமதி வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தரக்கோரி குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஐனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஊடக சந்திப்பில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் புனித ஸ்தலமான கச்சதீவில் கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இடம்பெறும் விடயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.