யாழில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது புகைப்படத்துடன் நோட்டீஸ் அடித்தவரின் மனைவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரின் மனைவியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தரை சனசமூகநிலையம் ஒன்றின் இளைஞர்கள் உசுப்பேற்றி கட்சி ஒன்றில் வட்டார வேட்பாளராக போட்டியிடுவதற்கு நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குடும்பஸ்தரும் தேர்தலில் போட்டியிட மும்முரமாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் நோட்டீஸ் அடிப்பதற்குமான செலவுக்காக மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்துள்ளார்.
அடகுவைத்த பணத்தில் நோட்டீஸ் அச்சிடப்பட்டு அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த தாலிக்கொடி அடகு வைத்தமை தொடர்பாக மனைவிக்கும் குடும்பஸ்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குடும்பஸ்தர் மனைவியைத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
அதுமட்டுமல்லாது மது போதையில் மனைவி மற்றும் மனைவியின் சகோதரனையும் தாக்கி நிலையில் மனைவி அயலில் உள்ள தோட்டக் கிணற்றில் குதித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு திரண்ட அயலவர்கள் மனைவியை காயங்களுடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.