துருக்கி பேரழிவில் 90 மணிநேரம் கழித்து பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியா நாடுகள் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தீரென ஏற்பட்ட பூகம்பத்தால் கோர பாதிப்பை சந்தித்தன.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி சுமார் 24,000 பேர் பலியாகியுள்ளனர்.
பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிலநடுக்கம் நிகழ்ந்து நாள்கள் கடந்த நிலையில் தற்போதும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிலையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சுமார் 90 மணிநேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைக்கு யாகிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹடாய் என்ற மாகாணத்தில் இந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் இடிபாடுகளுடன் சிக்கிய இந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அதிசயமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டு கதகதப்பான கம்பளியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.