வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும் அராஜகமாகவும் நடந்து கொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கண்டிப்பான உத்தரவின் பிரகாரமே மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பெண்ணொருவர் மரக்கறி விற்பனை
ராகலை, ஹைபோரஸ்ட் பகுதியில் பிரதான வீதியில் ஓரத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் போது அவ்விடத்துக்கு வந்த மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி மரக்கறி விற்பனை செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட பெண்ணை கடும் தொனியில் மிரட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஜீவன் தொண்டமான் நிர்வாகியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் சம்பந்தப்பட்டவரை உடன் நீக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.
இதனை ஏற்ற பெருந்தோட்ட யாக்கம் அதிகாரியை உடனடியாக பணி நீக்கியதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எழுத்து மூலம் மன்னிப்பு கோரவும் இணங்கியுள்ளது.
மேலும் அதேபோல இனியும் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.