யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர், யாழ் மக்களை அச்சுறுத்திவரும் வாள்வெட்டுக்குழுவான ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் என கூறப்படுகின்றது .
நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து
மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் ஆவா குழுக் காவாலிகள் வேகமாக பயணித்ததாகவும் அதில் ஒரு மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற நபரே உயிரிழந்தவராவார். ஜெயசீலன் ரகுசன் (வயது 17) என்ற மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக , ”சம்பவம் ஒன்று செய்யச் சென்ற நட்புக்களே சம்பவமாகிவிட்டீர்களே” என வன்முறை குழு ஒன்று முகநூலில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை யாழில் போதைபொருள் பாவனை இளையோரிடையே அதிவேகமாக பரவி வருவதுடன் , இதனால் வன்முறைச்சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றது.
அதோடு தெருவில் அதி வேகமாகச் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறானவர்களால் தெருவில் செல்லும் அப்பாவி பொதுமக்களுக்கும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.