யாழ்.கல்வியங்காடு வர்த்தக நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பபட்டு கூலிப்படையை பயன்படுத்தியே நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தொியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
இதற்காக விசேட அணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குழுவினர் தாக்குதல்
நேற்றுமுன் இரவு கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர்.
உரிமையாளரினை வாளினால் வெட்டிவிட்டு வர்த்தக நிலையத்தினையும் அடித்து நொறுக்கிய பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தினையும் குறித்த குழுவினர் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தில் வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தடயவியல் பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார், சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.