அமெரிக்காவில் உள்ள அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – மின்னசோட்டா மாகாணம் லேக்வில்லே பகுதியில் அமேசான் விற்பனை நிலையம் உள்ளது.
இங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளனர்.
இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் இறந்துபோன அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்தனர்.
ஆனால் அந்த குழந்தையின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பொலிஸாரின் விசாரணையில் அந்த பெண்ணை சுட்டு கொன்றது டொன்டே ரபேல் மெக்ரே என்பதும், அவர் அமேசான் ஊழியர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.