அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த விமானத்தில் மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டு தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக பயணி மீது சிறுநீர் கழித்ததால் சிக்கல்
நியூயோர்க்கிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தன்னுடன் பயணம் செய்த சக பெண் பயணிமீது சிறுநீர் கழித்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும். சமீபத்தில்தான் இது குறித்து ஏர் இந்தியா கொடுத்த புகாரின்பேரில் பொலிசார் வழக்கு பதிவுசெய்தனர்.
இதையடுத்து டெல்லி பொலிசார் சங்கர் மிஸ்ராவை தேடிவந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் அவர் பதுங்கியிருந்தபோது கைது செய்து டெல்லி கொண்டு வந்தனர். அங்கு சங்கர் மிஸ்ராவை டெல்லி நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தினர்.
மன்னிப்பு கேட்டார்
சங்கர் மிஸ்ரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் முன்பு சங்கர் மிஸ்ரா அழைத்துவரப்பட்டபோது அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டார். சங்கர் மிஸ்ராவின் முகத்தை நான் பார்க்கவே விரும்பவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.