32 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என்பது ஒரு சுடுகாடு; விடுதலையான நளினி!

0
335

32 ஆண்டுகள் சிறை வாழ்க்கை என்பது ஒரு சுடுகாடு, புதைகுழி, நரகம் என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் மற்றும் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 32 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட நிலையில் என்ன சந்தோஷம் உள்ளது.சிறைச்சாலைகள் கொடுமைகளை அனுபவித்தேன்.

32 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். இன்னும் திருப்தி இல்லையா. எனக்காக வாதாடிய எந்த வழக்கறிஞருக்கும் நான் காசு கொடுத்ததில்லை.நான் நானாகவே இருக்கிறேன்.

தமிழக மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.மேலும் நான் சிறையில் இருந்து வெளியே வர இன்று வரை உடனிருந்து அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.