அம்பாந்தோட்டை – சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ, மஹாவலிகட ஆர குளத்தில் தோணி ஒன்றில் பயணித்த 8 பேர் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன 3 பெண் பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த சிறுமிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த பாட்டனின் தான நிகழ்விற்கு சென்று தோணியில் சவாரி செய்ய முயன்ற வேளையிலேயே மூன்று சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மரணம் தொடர்பில் வெளியான தகவல்
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு குறித்த சிறுமிகள் உள்ளிட்ட குழுவினர் குருணாகல், பிஹிம்புவ பிரதேசத்திலிருந்து வந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், குருணாகல், பிஹிம்புவ, மாலபே கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகொடபொல கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயதான தருஷி மிஹிரங்கி சேனாதீர, குருணாகல் கோனிகொட மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த விஷ்மி ஹன்சிகா, குருணாகல், இப்பாகமுவ மகா வித்தியாலயத்தில் உயிரியல் பாடப்பிரிவில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய திலக்ஷி மதூஷிகா ஹேரத் ஆகிய மாணவிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்த பாட்டனின் தான நிகழ்வுக்கு சென்ற நிலையில், சிறுமிகள் உள்ளிட்ட குழுவினர் (12) அதிகாலை 2.00 மணியளவில் சூரியவெவ, மஹாவெலிகட ஆர பிரதேசத்திற்கு வருகை தந்து, அங்கு தமது உறவினர்கள் சிலரது வீடுகளில் தங்கியுள்ளனர்.
செல்பியினால் நேர்ந்த விபரீதம்
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் காலை தான நிகழ்விற்குத் அவசியமான ஏற்பாடுகளை செய்து உறவினர் ஒருவருடன், மஹாவெலிக்கடஆர குளத்திற்குச் சென்று, அங்கு மீன்பிடிக்கும் சிறிய தோணியொன்றை செலுத்தியுள்ளனர்.
குறித்த படகில் 8 மாத குழந்தையையும் அழைத்து சென்றுள்ளதுடன், அங்கு சென்றவர்கள் செல்பி எடுத்துள்ளதோடு, கைகளால் துடுப்பு போட்டு படகை வேகமாக ஓட்டி குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
திடீரென தோணி கவிழ்ந்த நிலையில், தோணியை செலுத்திய நபர் 8 மாத குழந்தையை காப்பாற்றியுள்ளதுடன், மேலும் மூவர் உயிருக்காக தத்தளித்துள்ள நிலையில், அதனை அவதானித்தவர்கள் மற்றுமொரு தோணியின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளனர்.
சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணை
இருப்பினும் படகில் பயணித்த மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர். சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததினைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் உயிர் காப்பு குழுவினர் அங்கு தேடுதலை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சூரியவெவ பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய, கிரிந்த கடற்படையின் சுழியோடி குழுவொன்று அங்கு அனுப்பி வரவழைக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10,16 மற்றும் 18 வயதுடைய சகோதரிகள் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை உள்ளிட்ட மீட்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.