குடிநீருக்கு பதிலாக ஆசிட் கொடுத்த பாகிஸ்தான் ஹொட்டல் ஊழியர்கள்!

0
357

பாகிஸ்தானில் ஹொட்டல் ஒன்றில் உணவருந்த சென்ற குழந்தைகளுக்கு தண்ணீர் போத்தல்களில் ஆசிட் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இக்பால் பூங்கா அருகே போயெட் ரெஸ்டாரண்ட் என்ற ஹொட்டல் உள்ளது. இந்த நிலையில் முஹம்மது ஆதில் என்பவர் தமது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட குறித்த ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்கு அந்த ஹொட்டல் ஊழியர்கள் தண்ணீர் போத்தல்கள் வழங்கியுள்ளனர். அதில் ஒரு போத்தலை திறந்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் கைகளை அதில் கழுவியுள்ளார். உடனே அவர் வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தார்.

அதன்பின்னர் அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் உண்டானது. அப்போது தான் அந்த போத்தல்களில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த போத்தலில் இருந்த ஆசிட் தண்ணீரை தெரியாமல் குடித்த அவர்களது இரண்டரை வயது குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்தது. உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், குழந்தை வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், அந்த ஹொட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடியும் வரை ஹொட்டல் மூடப்பட்டுள்ளது. ஹொட்டல் மேலாளர் முகமது ஜாவேத் என்பவரை கைது செய்து விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.