கேரளாவில் ஊருக்கே செல்லப்பிராணியாக மாறிய காகம்!

0
445

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் காகத்தை செல்லப் பிராணியாக வளர்த்துவருகிறார். மேலும், இந்த ஊர் மக்களும் இந்த காகத்திடம் அன்போடு பழகி வருகிறார்கள்.

செல்லப் பிராணிகள்

பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது எப்போதுமே ஒரு காதல் உண்டு. இப்போது என்று இல்லை. மனிதர்கள் நாடோடிகளாக இருந்த காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்த்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

விவசாயத்திற்கு மாடு வளர்ப்பில் துவங்கி நாய், பூனைகள் ஆகியவற்றை மனிதர்கள் வளர்த்து வந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நவீன காலத்திலும் வளர்ப்பு பிராணிகள் மீது மக்களுக்கு இருக்கும் காதல் குறையவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் காகம் ஒன்றினை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இதற்கு பின்னால் ஒரு சோகக்கதையே இருக்கிறது.

சோகம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வினோத்தின் வீடு இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இதற்கு இடையூறாக இருந்திருக்கிறது வினோத்தின் வீட்டில் இருந்த தென்னை மரம் ஒன்று. இதனையடுத்து அந்த தென்னை மரத்தை வெட்ட முடிவெடுத்திருக்கிறார் வினோத்.

Kerala Man has crow as a pet in his bakery

அப்போது, தென்னை மரத்தை வெட்டிச் சாய்த்த பிறகு தான் அதில் காக்கை கூடு இருந்தது வினோத்திற்கு தெரியவந்திருக்கிறது. மரம் சாய்ந்து கீழே விழுந்ததில் அதில் இருந்த 3 காக்கை குஞ்சுகளில் இரண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. ஒரு காக்கை குஞ்சு மட்டும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குற்ற உணர்ச்சி கொண்ட வினோத் அந்த காகத்தை காப்பாற்றியிருக்கிறார். அதன் உடல்நிலை சரியானவுடன் அதனை தொடர்ந்து வளர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார் வினோத்.

கேசி

தற்போது வினோத் நடத்திவரும் பேக்கரியில் ஜாலியாக வலம்வரும் அந்த காகத்திற்கு கேசி எனவும் பெயர் சூட்டியிருக்கிறார். தினமும் கேசிக்கு பிஸ்கட்கள், பழங்கள் மற்றும் இறைச்சிகளை கொடுத்து வருகிறார் இவர். மேலும், வினோத்தின் கடைக்கு வரும் பால் போடுபவர், பிஸ்கட் விற்பனையாளர் என அப்பகுதி மக்கள் பலரும் கேசியுடன் அன்புடன் பழகிவருகிறார்கள்.