பாகிஸ்தான் – அமெரிக்கா கூட்டு ஒரு புறம் இருந்தால் இப்போது மற்றுமொரு போர் மேகம் இந்தியாவை சூழ்ந்துள்ளது. வஞ்சனை நிறைந்த மூன்று நாடுகளின் கூட்டு இந்தியாவிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள் சகோதரர்களாகவே பார்க்கப்பட்டாலும் சில பிரிவினைவாத கும்பல்கள் எப்போதும் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
இந்திய எல்லைகளை சூறையாட நினைக்கும் எதிரி நாடுகளிற்கு இந்த பிரிவினைவாதம் தான் பகடைக்காய். இதனால் இந்தியா – பாக்கிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை ஓய்ந்து போக விடாமல் தோண்டி எடுத்து சூழ்ச்சி செய்து வருகின்றன சில மத்திய ஆசியநாடுகள்.
ஆனால் இங்கே அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அவர்களை எதிர்த்து தமது இன்னுயிரைத் தியாகம் செய்து மக்களைக் காப்பது இந்திய இராணுவமும் காவல்படையும் மாத்திரமே.
அதைத் தடுப்பதற்கோ பொதுமக்கள் கொல்லப்படுவதைக் குறைப்பதற்கோ எந்த நாடும் முயற்சி செய்வதில்லை.
இதனை சரியாக அவதானித்தாலே புரியும் உண்மையில் அவர்களது நோக்கம் என்ன என்பது.
அண்மையில் ரஷ்யா – உக்ரைன் போரிற்கு அடுத்தபடியாக பேசப்பட்டு வருவது அசர்பைஜான் – அர்மேனியா போர். இரண்டு நாடுகளும் இந்தியா பாகிஸ்தான் போலவே எல்லை முரண்பாட்டில் உள்ள நாடுகள்.
இப்போதைய சண்டையை ஆரம்பித்தது யார் என்பது தொடர்பில் இரண்டு நாடுகளும் மாறி மாறி மற்றையதைக் குற்றம் சாட்டினாலும் பொதுவான கருத்து அஸிர்பைஜான் அர்மேனியாவின் சில பகுதிகளை குறிப்பாக நாகோர்னோ கராபாக் பிரதேசத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு இதுதான் தக்க சமயம் என நினைத்து இந்த யுத்தத்தை ஆரம்பித்திருக்கலாம் என்பது.
காரணம் ரஸ்சியா இப்போது உக்ரைன் போரில் முழுமையாக ஈடுபட்டு வருவதால் அஸிர்பைஜான் – அர்மேனியா எல்லையில் யுத்த நிறுத்த ஏற்பாடுகளுடன் வந்து நிற்காது என்பது.
இந்த போரிற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? இந்தியாவை சூழ்ந்து சதி செய்யும் மூன்று நாடுகள் என்ன? இதனைப் பார்க்கலாம். இந்தியாவின் முக்கிய பகை நாடு பாக்கிஸ்தான் அஸிர்பைஜானிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
தனக்கு இலாபம் இல்லாத எந்த விடயத்திலும் பாக்கிஸ்தான் உதவிக்கு செல்லாது என்பது அறிந்த விடயம். இதன் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். இந்தியாவிற்கு எதிரான ஏதோ ஒரு விடயம் அங்கே உள்ளது என்று.
இதனைப் புரிந்துகொள்ள அஸிர்பைஜான் – அர்மேனியாவின் அடிப்படை மோதலைப் புரிந்துகொள்ள வேண்டும். அர்மேனியா ஒரு கிறிஸ்தவ நாடு. அஸிர்பைஜான் முஸ்லிம் நாடு.
நாட்டு மக்களின் நலன் மேல் அக்கறை கொண்ட எந்த அரசும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதில்லை என்பது ஒரு புறம் இருக்க மக்கள் இறந்தாலும் பரவாயில்லை தாங்கள் சாம்ராஜ்யங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கும் சிலர் மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம் துருக்கி அதிபர் எர்டோகான். ஒட்டோமான் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பும் கனவில் துருக்கி அதிபர் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து ஏனைய மத நாடுகளை தாக்கி வருகிறார். அவ்வாறு உருவாகியதே பாகிஸ்தான் – துருக்கி – அஸிர்பைஜான் சகோதர கூட்டு.
2020ஆம் ஆண்டு ஏற்கனவே அஸிர்பைஜான் அர்மேனியாவும் போர் செய்த போது பாக்கிஸ்தான் ஓடி சென்று ஆயுதங்கள் வழங்கி இருந்தது.
எர்டோகானைப் பொறுத்தவரையில் முஸ்லிம் நாடுகள் அருகில் உள்ள நாட்டுடன் பிரச்சனையில் இருந்தால் அழையா விருந்தாளியாக அதில் மூக்கை நுழைத்து முஸ்லிம் நாட்டிற்கு ஆதரவு வழங்குவது. இதனால் பாகிஸ்தானையும் அஸிர்பைஜானையும் கூட்டாக இணைத்துக் கொண்டார்.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல சர்வதேச தளங்களில் இந்தியா பாக்கிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார்.
பிரதானமாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டான OIC அமைப்பின் சந்திப்பில் நேரடியாகவே இந்தியாவைத் தாக்கி உரையாற்றியிருந்தார்.
இதனால் பாகிஸ்தான் துருக்கியின் வாலைப் பிடிக்க ஆரம்பித்தது. அத்தோடு drone விற்பனை தொடர்பாகக் கேட்கப்பட்ட போதும் இந்தியாவிற்கு drone விற்பனை செய்ய மாட்டோம் எனவும் பாக்கிஸ்தான் போன்ற சகோதர நாடுகளிற்கு மாத்திரமே drone களை விற்பனை செய்வோம் எனவும் கூறி இருந்தார்.
இப்போது அஸிர்பைஜானிற்கு மீண்டும் ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளது பாக்கிஸ்தான். பாக்கிஸ்தான் இதில் எதிர்பார்க்கும் பொருளாதார இலாபத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அரசியல் இலாபத்தையும் எதிர் நோக்குகிறது.
இந்தியாவிற்கு எதிராக எதாவது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் துருக்கி மற்றும் அஸிர்பைஜான் ஆகிய நாடுகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும் என்பது.
சரி இதற்கு இந்தியா என்ன பதிலடி கொடுத்துள்ளது? இந்த மூன்று நாடுகளின் கூட்டை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது எனப் பார்க்கலாம். அஸிர்பைஜானிற்கு பாக்கிஸ்தான் உதவி செய்யும் நேரம் அர்மேனியாவிற்கு ஆயுத ஏற்றுமதி செய்கிறது இந்தியா.
பாகிஸ்தானால் இந்தியாவிற்கு எதிராக ஒரு நட்பு கூட்டை உருவாக்க முடியும் என்றால் இந்தியாவிற்கு ஆதரவாக இந்தியாவால் நட்பு கூட்டினை உருவாக்க முடியாதா? 2020 இல் துருக்கி அஸிர்பைஜானிற்கு வழங்கி இருந்த bayraktar வகை drone கள் அர்மேனியாவிற்கு கணிசமான அளவு சேதத்தை ஏற்படுத்தி இருந்தன.
இந்த தடவை அவ்வாறு நடக்கக்கூடாது என்பதற்காக இந்தியா அதன் பினாகா ராக்கெட்களை அர்மேனியாவிற்கு வழங்கியுள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆர்மேனிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக விபரமாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இரு அமைச்சர்களும் ஒரே கருத்தில் உடன்பட்டு உள்ளனர் அதாவது பாகிஸ்தானும் துருக்கியும் தற்போது அர்மேனியாவின் நாகோர்னோ கராபாக்கை கைப்பற்றுவதற்கு எவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றார்கள் அதே அளவு தீவிரத்துடன் அடுத்து காஷ்மீர் மீது இலக்கு வைப்பார்கள் எனவும் இதற்கு இந்தியா இடமளிக்க கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இதன் விளைவாகவே ஆர்மேனியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்தியா மொத்தம் 2 ஆயிரம் கோடி பெறுமதியான ஆயுதங்களை அர்மேனியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தயாராக உள்ளது. எனவும் இதில் ஏவுகணைகள், ராக்கெட் வகைகள் மற்றும் வெடி குண்டுகள் போன்றவை உள்ளடங்குகின்றன எனவும் பாதுகாப்பு துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டுறவு எதிர்வரும் நாட்களில் மேலும் பலப்பட வேண்டும் என இரண்டு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.