கஜிமாவத்தை தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் ; விசேட வேலைத்திட்டம்

0
401

கொழும்பு, பாலத்துறை – கஜிமாவத்தை தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் நேற்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி 71 வீடுகளில் இருந்த 306 பேர் தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

60 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்தவர்களில் 106 பேர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தற்போது மோதர உயன சனசமூக மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டி கிராம உத்தியோகத்தர் அதிகார எல்லை காவல்துறை, ஆயுதப்படை மற்றும் ஏனைய பணியாளர்களின் ஆதரவுடன் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இடம்பெயர்ந்த பாடசாலை மாணவர்களை அடுத்த மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு அனுப்புவதற்கான பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் சகல சுகாதார வசதிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.