மட்டக்களப்பு – காத்தான்குடியில் உள்ள உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் நேற்றையதினம் (22-09-2022) திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு இவைகளை சீர் செய்வதற்காக காலஅவகாசமும் வழங்கப்பட்டதுடன், பேக்கரி உள்ளிட்ட மூன்று உணவகங்களுக்கு இதன்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவருடைய வழிகாட்டலிலும் நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் என 60 உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இதன்போது காத்தான்குடி நகரில் காணப்பட்ட 69 உணவு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், இதில் 41 வர்த்தக நிலையங்களில் இருந்து 73 வகையான மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 23 வகையான பொருட்கள் இன்றே எரித்து அழிக்கப்பட்டதுடன் ஏனையவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.