பிரித்தானிய நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் திகதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் திகதி பிரித்தானியா சென்றடைந்தது.
லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை பிரித்தானிய மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் கடந்த 14-ம் தேதி முதல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
14-ம் திகதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு கடந்த 19-ம் திகதி வரை லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து 19-ம் திகதி 2-ம் எலிசபெத்தின் உடல் விண்ட்சொர் மாளிகையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் 5 நாட்கள் வைக்கப்பட்ட இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் எத்தனை பேர் அஞ்சலி செலுத்தினர் என்ற தகவலை பிரித்தானிய கலாச்சாரத்துறை மந்திரி நேற்றையதினம் (21-09-2022) தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக பிரித்தானிய கலாச்சாரத்துறை மந்திரி மைக்கேல் டோனெலன் ( Michelle Donelan ) தெரிவித்துள்ளார்.