பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத்தின் (Queen Elizabeth II) இறுதிச் சடங்கில் போப் பிரான்சிஸ் (Pope Francis) கலந்து கொள்ள மாட்டார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல பாதிப்பால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. ராணியின் மறைவால் ஒட்டுமொத்த பிரித்தானியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
அவரது இறுதி சடங்கு வருகிற 19-ம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் லண்டனில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வாடிகன் இன்று தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸிற்கு பதிலாக வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லகர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.