லண்டனில் மறைந்த ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் மக்களுக்கு கிறிஸ்தவ பேராயர் ஒருவர் இலவசமாக உணவு வழங்கியுள்ளார்.
மறைந்த ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்த லண்டனில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்கின்றனர். ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் எதிர்வரும் 19ம் திகதி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், கடும் குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் Lambeth பாலம் அருகில் திரண்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது பேராயர் பீட்சா உணவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி சூடாக தேநீரும் பரிமாறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் இறுதிச் சடங்கிற்கு முன்பாக ராணியாருக்கு மரியாதை செலுத்த மக்கள் ஏற்கனவே இரவு பகல் பாராமல் தங்கியிருப்பதால் வரிசைகள் மைல்களுக்கு நீண்டுள்ளன.
பலர் 30 மணி நேரமாக வரிசையில் காத்திருப்பதாக கூறியுள்ளனர். மட்டுமின்றி ஆயுளில் ஒருமுறை தான் இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
ராணியாரின் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து அரை மைல் தொலைவில் 55 வயதான நபரும் ராணியாருக்கு மரியாதை செலுத்த காத்திருப்பவர்களில் ஒருவர்.
30 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் அயர்லாந்து நாட்டவரான இவர் ராணியாருக்கு நன்றி தெரிவிக்கவே காத்திருப்பதாக கூறியுள்ளார்.