இயற்கை எய்திய மகாராணியாரை மக்கள் நீண்ட காலம் நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள், இலங்கையர்கள் முதலானோர் மறக்க முடியாத ஒரு விடயத்தைச் செய்துள்ளார்கள்.
மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் வாழும் சுவர் ஓவியம் தீட்டும் கலைஞர்களான Jignesh மற்றும் Yash Patel ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் வாழும் சிலர் இணைந்து பிரித்தானிய மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் Hounslow கிழக்கு சுரங்க ரயில் பாதையின் வெளியே அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் சுவற்றில் பிரித்தானிய மகாராணியாரின் உருவப்படம் ஒன்றை சுவர் ஓவியமாக தீட்டியுள்ளார்கள்.
குஜராத்திலிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்த இந்த Jignesh மற்றும் Yash Patel ஆகியோர் 5 கின்னஸ் சாதனைகள் படைத்தவர்கள் ஆவர்.
இந்த ஓவியத்தைத் தீட்டும் பணியில் இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் பணியாற்றியுள்ளார்கள்.
மகாராணியாரின் இந்த ஓவியம் சுரங்க ரயில் பாதையிலிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும் வகையில் வரையப்பட்டுள்ளது.
பல்வேறு இனமதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் Hounslow பகுதியில் மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் அந்த ஓவியம் நீண்ட காலத்துக்கு அந்த சுவரில் இருக்கப்போகிறது.