எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாட்டைப் பற்றி சிந்திக்காமல் சுயநலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமலுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அண்மைக்காலமாக எந்தவொரு விடயத்திலும் திருப்தியடைய முடியாத நிலைமையே காணப்படுகிறது. அவர் மிகவும் சுயநலமாகவே சிந்திக்கின்றார்.
நாட்டைப் பற்றி சிந்திக்காமல் , தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என்ற அச்சமே , சஜித் பிரேமதாச சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமலிருப்பதற்கான காரணமாகும்.
தற்போதுள்ள நிலைமையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பாதுகாத்துக் கொண்டு , நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே செயற்பட வேண்டும்.
எதிரக்கட்சி தலைவர் கமராக்கள் முன்னிலையில் நிகழ்ச்சியைக் காண்பித்தாலும் , எதனையும் நடைமுறையில் செயற்படுத்துவதில்லை.
நாமும் சென்று அவருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்கின்றோம். அவர் சிறந்த மனிதன். இணைந்து பணியாற்றினால் அனைத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு காணப்படும் பிரச்சினைகளை விட , எதிர்க்கட்சி தலைவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ரஞ்சன் ராமநாயக்க ஏற்கனவே கூறியதைப் போன்று அனைவரும் ஒன்றாக இருக்கலாம். எதிர்க்கட்சி தலைவரும் அவ்வாறே இருக்கின்றார் என்றார்.