கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனானில் சொந்த பணத்தை எடுக்க வங்கியை சிறைபிடித்த வாடிக்கையாளரை பொதுமக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு ஆசிய நாடான லெபனானில் கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கி கணக்குகளில் இருந்து பொதுமக்கள் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள வங்கியில் அல்ஷேக் ஹூசைன் (40) என்பவர் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்தார். வங்கி ஊழியர்கள் உட்பட 10 பேரை சிறைபிடித்தார்.
தன் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் 210,000 டொலர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்துவிட்டேன். எனது தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது.
எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தாருங்கள் என்று வங்கி அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அன்று மாலைக்குள் அவரது அந்த மிரட்டலுக்கு பலன் கிடைத்தது. 10,000 டொலர் கேட்டு கைவிரித்த வங்கி நிர்வாகம் தற்போது அவருக்கு 30,000 டொலர் வழங்க முன்வந்தது.
மேலும், சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு அருகாமையில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார். வங்கி நிர்வாகம் பணம் அளிக்க முன்வந்த நிலையில் அவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அவர் வங்கியை சிறைபிடித்தது தவறல்ல எனவும் இக்கட்டான சூழலில் அவர் அவ்வாறான செயலில் ஈடுபட்டார் எனவும் பொதுமக்கள் அவருக்காக வாதிட்டுள்ளனர்.