இலங்கைக்கு தீங்கு செய்யமாட்டோம் – சீனா

0
541

இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ (Wan g) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை (Ali Sabri) கம்போடியாவில் சந்தித்துப் பேசினர்.

இதன்போது, சீன அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி ஒரே சீனா கொள்கையில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலையும் எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சீனாவின் ‘கடன் பொறி’ என்று கூறப்படும் கூற்றை மறுத்த சப்ரி இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்தை மட்டுமே சீனா கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். சீனாவின் உதவி இல்லாமல் இலங்கை எந்த வளர்ச்சியையும் அடைந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.