வெளிநாடுகளுக்கு ரணிலின் முக்கிய கோரிக்கை!

0
455

“இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும் வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும் தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு நாட்டின் வெளிவிவகாரம் சம்பந்தமாக அந்த நாட்டு அரசே தீர்மானம் எடுக்கும். அதில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது.

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும் போது அரசும் பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து முடிவெடுப்பார்கள். அதன் பிரகாரம் சீனக் கப்பல் வருவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருக்கின்றது.

இந்த விடயத்தை உள்ளக சக்திகளும் வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும் தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள்.

எந்த நாட்டையும் பகைக்கவேண்டிய மோதவேண்டிய நிலைமை இலங்கைக்குக் கிடையாது. வரலாறு காணாத பொருளாதார அடியால் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கை.

அதிலிருந்து மெல்ல மெல்ல இலங்கை இப்போதுதான் எழுகின்றது. இந்தநிலையில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பையே கோரி நிற்கின்றோம்.

பகைமைகளை மறந்து ஒவ்வொரு நாடுகளும் இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

சீனக் கப்பல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகும் முரண்பாடான செய்திகள் எமக்கு மிகவும் மனவருத்தத்தைத் தருகின்றது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.