சீன விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது என்றும் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
சீன கப்பல் குறித்து கடற்படைக்கு ஏதேனும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று வினவிய போதே கடற்படை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தொடபில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த கப்பலின் வருகைக்கான அனுமதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றிடம் பெற்றுக் கொள்ளப்படும் என்று நான் எண்ணுகின்றேன்.
எனினும் எனக்கு இது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது. இன்று காலை இந்த கப்பலின் வருகைக்கும் இலங்கை கடற்படைக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்களை சேகரித்து அதனை வழங்க முடியும் என்றும் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்