அதிகாரிகளின் அசட்டையீனத்தால் விமானச் சீட்டை பெறமுடியாமல் இலங்கை கனிஷ்ட வீரர்கள் நிர்க்கதியாகி நிற்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித்தவிக்கின்ற நிலையில் பலதரப்பட்டவர்களும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நெருக்கடிக்கு முக்கிய காரணமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாக்கத்தை உணர்கின்றார்களோ இல்லையோ ஒன்றுமறியாக சிறுவர்களும் குழந்தைகளும் இதில் சிக்கி தமது எதிர்காலத்தை இழந்துவரும் பரிதாபம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கின்றது.
இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொலம்பியா நாட்டின் கலி நகரில் ஓகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதற்கு இலங்கையில் இருந்து தெரிவான வீரர்கள் அதிகாரிகளின் அசமந்தமான போக்கினால் அங்கு போகமுடியாது நிர்க்கதியாக நிற்கின்றனர்.
அந்த வீரர்களுக்கான விமானச் சீட்டுக்களை அதிகாரிகள் உரிய நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறிவிட்டனர்.
இதனையடுத்து இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர்களும் அவர்களது பெற்றோர்களும் நேற்றிரவு விளையாட்டுத்துறை திணைக்களம் அமைந்துள்ள டொரிங்டன் விளையாட்டரங்கில் தரித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அத்துடன் தமக்கு நியாயம் வேண்டி அவர்கள் அங்கு நின்றதாக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளரொருவர் குறிப்பிட்டார். இலங்கையில் நாளைய சமுதாயத்தை உருவாக்கவேண்டிய சிறுவர்களது எதிர்காலம் சில அதிகாரிகளால் கேள்விக்குள்ளாகி வரும் பரிதாப நிலை அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
அதேவேளை இலங்கையில் இருந்து இம்முறை 7 கனிஷ்ட மெய்வல்லுநர்கள் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.