நாட்டின் முன்னேற்றத்துக்கு புதிய அரசுக்கு நேசக்கரம்

0
469

நாட்டின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு நேசக்கரம் நீட்டுவதாக ஜனாதிபதி தெரிவில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசியல் மீது இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது அனைவரதும் பொறுப்பென்றும் அவர் தெரிவித்தார். புதிய ஜனாதிபதிக்கான தெரிவு நிறைவடைந்த பின்னர் சபையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தற்போது நாடு பெரும் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளதென்பதைக் குறிப்பிட்ட அவர்,

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது என்றும் நாட்டின் 22,000 மில்லியன் மக்களும் எம்மோடு இருப்பார்களென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கான தெரிவில் தம்மை முன்மொழிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வழிமொழிந்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

குணமடைந்த நாட்டுக்கு எழுந்து நிற்க முடியும் ஆனால் நோய் உள்ள நாடு எழுந்து நிற்க முடியாது. சூழ்ச்சியான அரசியல் கலாசாரத்தை நிறைவு செய்வதற்காகவே நான் ஜனாதிபதி தெரிவில் போட்டியிட்டேன்.

அரசியல் கலாசாரம் சீரழிந்துள்ளதுடன் அதன் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது அனைவரதும் பொறுப்பென்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக தனியான நிகழ்ச்சி நிரலை முக்கியமாக்கிக் கொண்டு அரசியலமைப்பிலும் அரசியலமைப்பு திருத்தத்திலும் செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களின் இறைமையை காட்டிக் கொடுத்து சுதந்திரம் அடைந்த தினத்திலிருந்து நாம் அனுபவித்த வஞ்சகமான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே நான் போட்டியிட்டேன்.

அந்த வகையில் வாக்குகள் மற்றும் இலக்கத்தின் மூலம் தோல்வியடைந்தாலும் எனக்கு தைரியமூட்டிய ஒத்துழைப்புகள் வழங்கிய அனைவருக்கும் நான் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வரலாற்றில் முதல் தடவையாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அவசியம் எமக்கு இருந்தது. நாம் தோல்வியடைந்தாலும் அதற்கான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு பாதிப்படையாது.பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும் இந்த ஒன்றிணைப்பு உலகுக்கே முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது.

பிராந்தியத்திலேயே பழமையான ஜனநாயக நாடென்ற வகையில் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளும் அதற்காக வழி வகுத்துள்ளன. அரசியல் மற்றும் அரசியல் செயற்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அனைவரதும் பொறுப்பாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.