உக்ரைனை கட்டியெழுப்ப 750 பில்லியன் டாலர்கள் தேவை; ஜனாதிபதி ஜெலென்ஸ்கி!

0
615

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உக்ரைனுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று உக்ரைனிய ஜானதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) கூறுகிறார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த திங்களன்று நடந்த உக்ரைன் மீட்பு மாநாட்டில் பேசிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) போரினால் சிதைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப 750 பில்லியன் டொலர்கள் (இலங்கை ரூபாயில் 2 கொடியே 68 லட்சம் கோடிகள்) செலவாகும் என்றும் இது ஜனநாயக உலகின் பகிரப்பட்ட கடமை என்றும் கூறியுள்ளார்.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட பாரிய அழிவு குறித்து அதனை மீண்டும் கட்டமைக்க நாட்டிற்கு என்ன தேவை என்பது குறித்து ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) விவரித்தார்.

அப்போது, “உக்ரைனின் மறுசீரமைப்பு என்பது ஒரு தேசத்தின் உள்ளூர் பணி அல்ல இது முழு ஜனநாயக உலகின் பொதுவான பணியாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உக்ரைனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) பேசுகையில்,

நாட்டை மீண்டும் கட்டமைக்க 750 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். “மீட்பதற்கான முக்கிய ஆதாரம் ரஷ்யா மற்றும் ரஷ்ய தன்னலக்குழுக்களின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டெனிஸ் கூறினார்.

மேலும், “ரஷ்ய அதிகாரிகள் இந்த இரத்தக்களரி போரை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்கள் தான் இந்த பாரிய அழிவை ஏற்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.