முல்லைத்தீவில் சைக்கிள் திருடர்களை அடித்து விரட்டிய மக்கள்!

0
490

முல்லைத்தீவில்  அண்மைக்காலமாக இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் துவிச்சக்கரவண்டி திருட்டு மற்றும் தண்ணீர் பம்பிகள் திருட்டில் ஈடுபட்ட நபர், அவற்றை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நபர் மளிகை கடையில் நின்ற சைக்கிள் ஒன்றினை திருடிச் சென்ற வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரட்ன நாயக தலைமையிலான குழுவினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்கள்.

துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் இனங்காணப்பட்டதுடன் அவருடன் தொடர்புடைய மாந்தை கிழக்கு பகுதியை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 03 சைக்கிள்கள் 05 தண்ணீர் பம்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (05-07-2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் சைக்கிள் திருடர்களை அடித்து நொருக்கிய மக்கள்! | Mullaitivu People Who Caught Bicycle Thieves