ஆஸ்திரேலியாவில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பாக மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
எலிசபெத் ஸ்ட்ரூஸ் (Elizabeth Rose Strauss) டைப் வன் நீரிழிவு நோயாளியாகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் நீரிழிவு நோய்கான ஊசி செலுத்திக் கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மீது கொலை, சித்திரவதை மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக 19 முதல் 64 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலிசபெத்தின் (Elizabeth Rose Strauss) உடல்நிலை மோசமடைவதைக் குழுவினர் அறிந்திருந்த போதிலும் மருத்துவ உதவியை நாடவில்லை என குயின்ஸ்லாந்து பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது பெற்றோர்களான ஜேசன் மற்றும் கெர்ரி ஸ்ட்ரூஸ் Toowoomba நகரில் உள்ள ஒரு சிறிய மதக் குழுவின் உறுப்பினர்கள் என்றும், இந்த மதக்குழு எந்த முக்கிய தேவாலயத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எலிசபெத் (Elizabeth Rose Strauss) கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் பெற்றோர் மற்றும் அந்த குழுவினர் சிறுமிக்கு ஊசி வழங்காமல் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மாத்திரம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி (Elizabeth Rose Strauss) உயிரிழந்துள்ளார். அதேசமயம் சிறுமி உயிரிழந்து ஒரு நாள் முடியும் வரையும் அதிகாரிகள் ஒருவரும் அழைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சிறுமியின் (Elizabeth Rose Strauss) மரணத்திற்கு குடும்பத்தினரும் மத குழுவினருமே காரணம் என்பது உறுதியாகிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.