கந்தளாயில் பெற்றோல் பெற்றுத்தருமாறு ரகளையில் ஈடுபட்ட பௌத்த துறவி

0
615

கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றுமுன் தினம் (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டார்.

குறித்த பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவருக்கு எரிபொருள் வழங்க முடியாதென தெரிவித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டார்.

அத்துடன் தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த துறவி கடுமையான வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டார்.

இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பி அனுப்பியதாக கூறப்படுகின்றது. அதேவேளை வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.