பசிலின் சூழ்ச்சி ஆரம்பம்! பரபரப்பாகும் தென்னிலங்கை

0
645

தென்னிலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பான பல விடயங்கள் அரங்கேறவுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில், ராஜபக்ஷகள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போதும், திரைமறைவில் அவர்கள் அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல்சார்ந்த பல்வேறு நடவடிக்கையை முன்னெடுப்பதில் இன்னும் பசில் ராஜபக்ஷவின் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை கொண்டு, தமக்கு எதிரான எதிர்ப்பின் வீரியத்தை குறைத்துக் கொண்ட ராஜபக்ஷர்கள், தற்போது ரணிலை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நெருக்கடிகள் காரணமாகவே, இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் பெருந்தொகை வெளிநாட்டு உதவிகளை கூட பெற்றுக்கொள்ள ரணில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ஷர்களின் ஆதிக்கம் தொடரும் வரையில், இலங்கைக்கு எந்தவொரு நாடும் உதவி செய்ய முன்வராது என பகிரங்கமாகவே அறிவித்துள்ளனர். ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் என்ற முத்திரையை சர்வதேசம் ராஜபக்ஷர்கள் மீது குத்தியுள்ளது.

இந்நிலையில் சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட ரணில், தற்போது தமக்கு ஆபத்தான துருப்பாக மாறியுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

ரணில் வகிக்கும் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற பதவிகளை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நிதியமைச்சராக அலி சப்ரி மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அலி சப்ரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் வாரங்களில் ரணில் வெளியேற்றப்பட்டு மற்றுமொரு பிரதமர் பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வேலைத்திட்டங்களை பசில் ராஜபக்ஷ தற்போது முன்னெடுத்து வருகிறார்.

புதிய பிரதமருக்கான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றத்துடன் இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கட்சியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பல குடும்பங்கள் ஒருவேளை உணவுக்காக போராடி வருகின்றனர். எனினும் நாட்டை ஊழலில் சிக்க வைத்து, பாரிய நெருக்கடிக்குள் சிக்க வைத்த ராஜபக்ஷர்கள் தொடர்ந்தும் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மக்களை பகடை காய்களாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பசிலின் சூழ்ச்சி ஆரம்பம்! பரபரப்பாகும் தென்னிலங்கை | What Kind Of Economic Crisis Is Sri Lanka