ரஷ்யா மீது மற்றுமொரு அதிரடி தடைவிதித்த ஜி-7 நாடுகள்!

0
323

 உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஜி-7 நாடுகள் முடிவு செய்துள்ளன.

உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள கூட்டமைப்புதான் ஜி-7.

இந்நிலையில் 48வது ஜி-7 மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்டமாக, ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக உள்ள தங்கத்தின் இறக்குமதிக்கும் மேற்கு நாடுகள் தடை விதிக்க உள்ளன. நேற்று ஜி-7 மாநாடு தொடங்கும் முன்பாக அமெரிக்க அதிபர் பைடன் இதை தெரிவித்தார். முதல் கட்டமாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா ஆகியவை இந்த தடையை விதித்துள்ளன.

அவற்றினை பின்பற்றி ஜெர்மனியும், இதர ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் தங்கத்துக்கு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய், எரிவாயுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு பல லட்சம் கோடிக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்தாண்டில் மட்டுமே 1,260 கோடி பவுண்டு தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாகும். கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்தே ரஷ்ய படைகள் இதுவரையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் நேற்று முதன்முறையாக தனது நட்பு நாடான பெலாரசில் இருந்து டியூ-22 என்ற நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது கடந்த 3 வாரமாக பெரியளவில் எந்த தாக்குதல்களையும் நடத்தாமல் அமைதியாக இருந்த ரஷ்யா, நேற்று திடீரென குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியது. குறிப்பாக, ஜி-7 மாநாடு தொடங்கும் முன்பாக இது நடந்ததில், 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன.

அதேசமயம் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், தலைநகர் கீவ்வுக்கு ரஷ்யா மீண்டும் குறி வைப்பதாக கருதப்படுகிறது.