பிரிட்டனில் கணவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை

0
581

பிரித்தானியாவில் கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது மனைவி குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் லாரன் மெக்ரேகர். இவரின் கணவரான கிரிஸ் மெக்ரெகர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

தம்பதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கிரிஸ் மற்றும் லாரன் தங்களுக்கு ஆசை குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது கிரிஸ்சுக்கு மூளையில் கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த தம்பதி மனமுடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி கிரிஸ் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், கிரிஸ்சின் நினைவாக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என லாரன் நினைத்து அதற்காக திட்டமிட்டுள்ளார்.

கணவர் கிரிஸ்சின் உயிரணுவை சேகரித்து வைத்த லாரன், அதை தனது IVF சிகிச்சைக்காக பயன்படுத்தியுள்ளார்.

எனவே, கிரிஸ் உயிரிழந்த ஒன்பது மாதத்திற்குப் பின் IVF சிகிச்சை எடுத்துக்கொண்டு planned C section மகப்பேறு முறையில் ஆண் குழந்தையை லாரன் மெக்ரேகர் பெற்றெடுத்துள்ளார்.

தந்தை இறந்து இரண்டு ஆண்டு கழித்து கடந்த மே 17ஆம் தேதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு செப் என லாரன் மெக்ரேகர் பெயர் சூட்டியுள்ளார்.

தந்தையர் தினத்தன்று லாரன் தனது கணவர் புகைப்படத்திற்கு அருகே கையில் குழந்தையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை செப் தந்தை கிரிஸ் போலவே உடல் தோற்றம் கொண்டுள்ளதாகக் கூறும் மனைவி லாரன் கிரிஸ்சின் மறைவால் கண்ட இழப்பை தனது செல்லக் குழந்தை மூலம் திரும்பப்பெற்றுள்ளேன் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.